கடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர்

கடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவிக்கும் ஆன்மீக உபதேசம்!!!

முற்பிறப்பு கர்மாக்கள் அல்லது கவனக்குறைவு அல்லது ஏழரைச்சனி/அஷ்டமச்சனி அல்லது அளவற்ற கருணையால் தவறான ஆட்களுக்கு ஜாமீன் ஏற்றல்,குடும்பப் பொறுப்பை தன் மீது சுமத்திக் கொள்ளுதல் போன்றவற்றாலும்,வேறு பல சொல்லமுடியாத காரணங்களாலும் தனி மனிதர்கள் கடன் என்ற மோகினியிடம் சிக்கிக் கொள்கின்றனர்;பலவிதமான பரிகாரங்கள்,வழிபாடுகள் செய்தாலும் கடன் குறைவதற்கான வழிகளே தெரியவில்லை; என்றும் தெரிவிக்கின்றனர்;ருணவிமோசன வழிபாடுகள் செய்தும் தீரவில்லை எனில் கடுமையான கர்மவினையால் இந்தக் கடன்கள் நமக்கு உருவாகியிருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பைரவ பரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் முதலில் அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;ஏனெனில்,தினமும் மது அருந்துபவர்களின் ஜாதகம் இயங்காது;அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்களின் இறைவழிபாடு அவர்களுக்கே பலன்கள் தருவதில்லை;
யாருக்கு கடன் இருக்கிறதோ அவர்கள் தமது பழைய பனியன்/வேட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்;(கணவனின் கடன் தீர மனைவி இந்த வழிபாட்டைச் செய்யலாம்;அப்பா சார்பாக மகளோ,சகோதரன் சார்பாக சகோதரியோ இதைச் செய்யக் கூடாது.நண்பனுக்காக பெண் தோழியோ இதைச் செய்யக் கூடாது;தனித்து வாழும் ஆண்கள் தாமாகவே செய்ய வேண்டும்).நீண்டகாலமாக பயன்படுத்திய பனியன்/வேட்டியை சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்;(துவைத்து காய வைத்தப்பின்னர் இதைச் செயல்படுத்தவும்) பத்து செண்டிமீட்டர் நீளமும் பத்து செண்டிமீட்டர் அகலமும் உடைய 16 சம சதுரத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்;கூடவே,கறுப்பு நூல்கண்டு ஒன்றும் கொஞ்சம் மிளகும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்;(சமையலறையில் இருக்கும் மிளகைப் பயன்படுத்தக்கூடாது; தனியாக கடையில் வாங்கிக் கொள்வது அவசியம்)
ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த 16 சம சதுரத் துண்டுகளில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்;அதில் ஒவ்வொன்றிலும் 27 மிளகுகளை வைத்து கறுப்பு நூலால் கட்டிக் கொள்ள வேண்டும்;ஒரு தேங்காய் வாங்கி,அதை உடைத்துவிட்டு,உள்பகுதியில் ஈரமில்லாமல் துடைத்து வைத்துக் கொண்டு தேங்காயின் உள்பகுதியில் இந்த 27மிளகுகளைக் கொண்ட கறுப்புநூலால் கட்டப்பட்ட சிறுபொட்டலத்தை வைக்க வேண்டும்;ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தேங்காய் மூடியினுள்(உள்ளே தேங்காய் இருக்கவேண்டும்) வைத்து,அந்த தேங்காயில் சுத்தமான நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.
பைரவப் பெருமானின் சன்னிதியில்,இந்த தேங்காய்த் துண்டுகளை பைரவப்பெருமானின் முன்பாக வைக்க வேண்டும்;(சில கோவில்களில் பைரவரின் முன்பாக வைக்க அனுமதிப்பதில்லை;அவர் இருக்கும் பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்)வைக்கும்போது அங்கே இருக்கும் காலியான அகல்விளக்கின்(இல்லாவிட்டால் கடையில் வாங்கி வரவும்) மீது தேங்காயின் கூர்மையான கீழ்ப்பகுதி இருப்பது போல நிலைநிறுத்திவைக்க வேண்டும்;
பைரவப் பெருமானிடம் மனப்பூர்வமாக தனது கடன்கள் விரைவாக தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த இரண்டு தேங்காய்களிலும் இருக்கும் மிளகுப்பொட்டலத்தின் மீதும் தீபமேற்ற வேண்டும்.
இது போல தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு செய்ய வேண்டும்.தீட்டு,வேலைப்பளு போன்ற காரணங்களால் தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் செய்ய முடியாத நிலை வந்தாலும்,விட்டுவிட்டாவது எட்டே எட்டு சனிக்கிழமைகள் மட்டும் இம்மாதிரியான வழிபாடு செய்ய வேண்டும்.எட்டாவது சனிக்கிழமை நிறைவடைந்தது முதல் 90 நாட்களுக்குள் எவ்வளவு பெரிய கடன் தொகையாக இருந்தாலும் அவை தீர எதிர்பாராத உதவியை பைரவப் பெருமான் அருளுவார்;கடந்த 25 ஆண்டுகளாக இந்த சுயபரிகாரமுறையைப் பின்பற்றி ஏராளமானவர்கள் தமது கடன்களில் இருந்து மீண்டிருக்கின்றனர்.தனித்து வாழ்ந்து வரும் பெண்கள் தமது சக்திக்கு மீறிய கடன்களில் சிக்கியிருந்தால் கடையில் கிடைக்கும் கைத்தறி காடாத் துணியை வாங்கி அதில் மேலே கூறியது போல 27 மிளகு வைத்து வழிபாடு செய்ய கடன்கள் தீரும்.
ஏராளமான வாசக,வாசகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் அறிவித்த பைரவ ரகசியம் தற்போது நமது ஆன்மீகக்கடலில் வெளியிடப்படுகிறது.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ